Skip to main content

நான் என்ன செய்யட்டும்?

பஸ் சாவுகாசமாய் நின்றுகொண்டிருந்தது. முன்படியிலிருந்து நான்காவது சன்னலோர சீட் கிடைத்த மகிழ்ச்சியில் அமர்ந்திருந்தேன். எனக்கு இடதுபக்க வரிசையிலிருந்த சீட்டின் முதுகு உடைந்து கூனிப்போயிருந்தது. மழை பஸ் முழுவதையும் குளிப்பாட்டி, சுத்தப்படுத்தியது. கண்ணாடி ஜன்னலை மேலே தூக்கிவிடும் ஸ்டைல் எனக்கு ஏனோ பிடிக்காது. வேறு வழியில்லாமல் ஜன்னலை மேலே தூக்கி அதன் லாக்கை விடுவித்தேன். ஒரு புறம் மட்டும்தான் லாக் நின்றது. காற்று மெதுவாக என் சட்டைக்குள் புகுந்து குளிர் ஊட்டியது.  அனுமதிக்கிறவரை காத்திருக்கிற நாகரிகம் அதற்க்கு  தெரிந்திருக்கிறது போல, சட்டென எனக்குள் சிரித்துக்கொண்டேன். வயதான தாத்தா, இளம் தம்பதி, குழந்தையோடு ஒரு பெண், சிறுவன் என வரிசையாய் பஸ்ஸில் ஏறிக்கொண்டிருந்தனர். சர சர வென சத்தம் கேட்டு தலையை திருப்பி வெளியே பார்த்தேன். இந்த காற்று மரங்களை ஆட்டி அதன் இலைகளை தற்க்கொலை செய்ய வைத்தது. அடுத்த கணம் விழுகின்ற  இலைகளை தாங்கி, தொட்டிலாட்டி தரையில் தள்ளியது. கிழிருந்து எழுந்து மலருக்குள் போய் உட்கார்ந்து மலர்படுக்கையில் துயில்கலைந்து, என் நாசியில் புகுந்து, நான் ஆன பிறகு பிரிந்து வேறானது. பண்டமாற்று செய்ய வேண்டுமென்றால் என் மனதைதான் காற்றுக்கு மாற்றாக இந்த நிமிடத்தில் தர முடியும். ஆனந்தத்தில் கூத்தாடியது. அமைதியானது.
மெதுவாக எனக்கு இருபுறங்களிலும் இருக்கிற வானுயர்ந்த மரங்கள் ஓடத் தொடங்கியது. கூன் விழுந்த சீட் மட்டும் காலியாக கிடந்தது. மேகங்கள் ஆசிர்வாதமாக சில மழைத்துளிகளை என் கைகளில் கொட்டியது. வெளியே தலையை விட்டு எட்டிப்பார்த்தேன், உயர்ந்த மரங்கள் மேகங்களுக்குள் சென்று தீர்ந்தங்களை தெளித்தது போல தோன்றிற்று. காற்று தொடர்ந்து என்னை குளிரூட்டும் வேலையில் முழ்கிப்போயிருந்தது. என் கையை ஜன்னலின் இரும்புக் கம்பியில் கெட்டியாக பிடித்து, மனம் நழுவி விழுந்துவிடாமல் பார்த்துக்கொண்டேன்.
யூக்கப்லட்டிஸ் மரத்திலிருந்து வரும் வாசனை மனதை கிளர்ச்சியுற செய்தது. கொல்லிக்கட்டை போல அணைந்து கொண்டிருக்கின்ற சூரியன் மரங்களின் இடைவெளியில் ஒளிந்து விளையாடினான். பஸ் மூங்கில், சவுக்கு மரங்களின் நிழல்கள் மேலே ஏறிக்கொண்டிருந்தது. பஸ்ஸின் நிழல் அம்மரத்தின் அடிப்பகுதியை வெட்டிக்கொண்டே போனதை கூன் விழுந்த சீட் ஜன்னலின் வழியே தெரிந்தது. கொக்குகள் போருக்கு ஆயுத்தமாகி வரிசையில் அணிவகுத்துச் சென்றது. நானும் பொறுத்து பார்த்தேன் அணிவகுப்பு முடிவதாய் தெரியவில்லை. தலையை வெளியே நீட்டியும், எதிர்புற ஜன்னல் வழியே பார்த்தும் கண்டடைய முடியவில்லை, சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு பார்த்த போதுதான் தெரிந்தது, முழுநிலவிலிருந்து ஒவ்வொன்றாய் அனுப்பப்படுவது. கொக்குகளின் வியூகம் மலைக்கும்படி தோன்றிற்று. படைத்தளபதி யாரென்று கண்டுபிடிக்க கூடாது என்று மாறி மாறி ஒவ்வொரு கொக்கும் படைக்கு தலைமை தாங்கிச் சென்றது. நிச்சயமாக இவைகள் கட்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் சூரியனை மீட்டுவிடும். அதற்க்குள் நீண்ட மரங்கள் எல்லாம் ஓடி புல்வெளிப் பரப்பு வந்திருந்தது. தூரத்தில் தெரிந்த மலைகள் வெய்யிலின் கொடுமை தாளாது அணிந்துகொண்ட மேக குல்லாவை இன்னும் கலட்டாமல் வைத்திருந்தது. பூமி, வானத்தைப் பார்த்து காமத்தால் பொங்கும் போது சில சமயம், வானத்தை தழுவும் உயர்ந்த மரமாகவும், மறு சமயம் பூமியை ஒட்டி நிற்க்கும் புல்லாகவும் பொங்குவது அதன் காமத்தைப் பொறுத்தது. சிறிது நேரம் புல்வெளிகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தேன். பணைத்தோள் வில்போல் வளைந்து, இருகரங்கள் அம்பாய் வானத்தைப் பார்த்திருந்தது. அவள் முதுகினில் கார்கூந்தல் துயிலூரங்கியது. புல் ஆசனத்தில் வீற்றிருந்தாள். தோளின் இருபுறமும் சரடு ஒன்று முன்னழகையும், பின்னழைகையும் மறைக்கும் திரையை இணைத்திருந்தது. அந்த சரடு துலாத்தட்டைப் போல முன்னழகையும், பின்னழைகையும் எடை போட்டது. பின்னழகு  மிகுந்து அதன் திரை சற்றே கிழிறங்கியது அதன் வழியே அவள் அழகு வழிந்தோடியது. என் கண்கள் அவற்றை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் தின்றது. நொடிப்பொழுதில் மறைந்து போனாள். திரும்பவும் சில நொடிகளில் என்னுள்ளே எழுந்தாள். மனதில் எண்ணங்களைக் கூட்டி கூட்டி பெரும் கற்குவியல் போல எனக்கு தெரியாமல் அடுக்கிவிட்டேன். சட்டென விழித்ததும் எடையின் வலி தாளாது துன்பத்தை முளைக்கவிட்டது. துன்பம். துன்பம் என்று மனம உழன்றாலும், வேண்டாம், வேண்டாம் என்று ஊமை மனம் கத்தினாலும், யானையைச் சுத்தும் உண்ணியைப் போல அவளது எண்ணங்கள் என்னைச் சுற்றி வந்தது. காற்றின் குளிர்ச்சியும், பூமியின் காமத்தையும், சூரியனையும், சந்திரனையும், எனது காமம் வென்று அதனை சாதாரண பொருளாக மாற்றியது. அவைகள் அற்பமானவைகளாக தோன்றிற்று. இரசிப்பதற்க்கு அவளைத்தவிர வேறு எதுவும் இல்லை என்றே நினைத்தேன். புல்வெளிகளின் நடுவே வேப்ப மரத்தின் அடியில் உடுக்கை அடித்துக்கொண்டு ஒரு கூட்டம் சாமியாடியது. உடுக்கையின் அதிர்வு என் மனதை பிரட்டிப்போட்டது. பெண்னோருத்தி நெற்றியேங்கும் திருநீரு பூசி கழுத்தில் மாலையிட்டு ஆடிக்கொண்டிருந்தாள். கிழவன் ஒருவன் இடுப்பில் துண்டைக்கட்டியவாறு பாடிக்கொண்டிருந்தான்.  உடுக்கையின் அதிர்வு மிக அருகே வந்ததும்,  அந்த இடமே ஒரு அதிர்வுக்கு உள்ளானது போல தோன்றிற்று. மனம் வழுவி, வெறிகொண்டு, நழுவி சுயநிலைக்கு வருவதற்க்குள் அந்த காட்சி வெகு தூரத்தில் விலகியது. எல்லை அம்மன் அவள்.
புல்வெளிகள் சிறு சிறு கட்டிடங்களாய் அங்கொன்றும், இங்கொன்றும் முளைத்திருந்தது. புல்வெளிக்கு நடுவே யார் விதை போட்டு வளர்த்திருப்பார்கள் என்று தோன்றிற்று. பொங்கும் காமத்தை காங்கீரிட் போட்டு மறைத்தவர்கள் அவர்கள், நிச்சயம் பூமியின் கோபத்திற்க்கு ஆளாவார்கள். அதற்க்குள்ளாகவே புல்வெளிகள் குறைந்து கட்டிடம் ஒன்றை ஒன்று நெருங்கிக்கொண்டிருந்தது. பின்பு மெதுவாக வளரத்தொடங்கியது. காட்சிகள் தொடர்ந்து மாறிய வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் காட்சிகள் பிரேக் போட்டு நின்றுகொண்டது. வண்டிகள் முந்திச் செல்ல எத்தனித்து தோற்று நின்றன. காற்று சூடாகி எறிந்தது. ஜன்னலின் லாக்கை விடுவித்து மூடினேன். வேண்டாம் என்றாலும் கண்ணாடி வழியே அந்த காட்சி தெரிந்தது. பச்சை நிற விளக்குக்கு பல கால்கள் தவமிருந்தன பிரேக்கிலும், எக்ஸ்லேட்டரிலும்.  ஒருவழியாய் நான் இறங்கவேண்டிய இடம் வந்தது, இறங்கிக்கொண்டேன். பஸ் கருப்பு நிற புகையை கக்கியவாறு நகர்ந்தது. பர்ஸையும், தோள் பேக்கும் இருக்கிறதா என சோதனை இட்டுக்கொண்டேன். டம். . என்ற சத்தம் கிட்டத்தட்ட என் சப்த்த நாடிகளையும் ஒடுங்கிவிடச் செய்தது. ஆ. . என்று தொடர்ந்து இனக்குரலில் கத்தும் சத்தம். கிட்டத்தட்ட உறைந்தேவிட்டேன். கீழே விழுந்த பைக்காரன், தன் பொண்டாட்டியைப் பார்த்து கத்திக்கொண்டிருந்தான். சாலையில் பைக்கிலும், காரிலும் போவோர் அவனை சுற்றிக்கொண்டும், நிற்க்காமலூம் சென்றனர். கீழே விழுந்தவனைப் பார்ப்பதும், கைக் கடிகாரத்தைப் பார்ப்பதுமாய் கூட்டம் நகர்ந்துகொண்டிருந்தது. அவன் போவோரைப் பார்த்துக் கதறினான். எந்தவித எதிர்வினையும் இல்லை. அவள் இறந்துவிட்டாள் என நினைக்கிறேன். நான் என்ன செய்யட்டும்?   விழுந்தவர்களை காப்பாற்றலாமா? வந்த பஸ்ஸை வேர காணோம்.பஸ் வந்தால் திரும்பிவிடலாம். யாருமே காப்பாற்றபோது நமக்குமட்டுமென்ன? ஆனால் பாவம் தானே. நான் என்ன செய்யட்டும்?


Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

மியாவ் மியாவ்

கருப்பணசாமி, சிலை செஞ்சு வச்சுப்போடறன். இந்த சீவன காப்பாத்து என கண்களை மூடி மேற்க்கே பார்த்து வேண்டிக் கொண்டாள் எங்கள் ஆத்தா. பக்கத்தில் பூனை பக்…பக்….கென்று கக்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ அழுத்திக் கொண்டது போல அது கக்கியது. அப்போதுதான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தேன். பூனை கத்தற சத்தமும், ஆத்தா சாமி கும்பிடற சத்தத்தையும் கேட்டு பொடக்காளிக்கு வந்தேன். கண்களை திறந்த ஆத்தா கையிலிருந்த திருநீரை வீசி பூனையின் மேல் எறிந்தாள், பிறகு அதன் நெற்றியில் பூசிவிடப் போனதும் அது பயந்து ஓடிப்போனது. சும்மா இல்லாத, இந்த கெரகம்…….என்று அதை திட்டிக்கொண்டு என்னை பார்த்தவாறு ஆசாரத்திற்க்கு நகர்ந்தாள். எனக்கும் ஆத்தாவிற்க்கும் முந்தானேத்து பயங்கர சண்டை அதனால் பேச மாண்டாள். நான் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு ஏதோ பூனைக்கு உடம்பு சரியில்லைனு நினைத்துக்கொண்டேன். இரா தூங்கும்போது மூங்கில் விட்டத்துக்கும், முகட்டு ஓடுக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியில மெதுவாக தன்னோட கால எடுத்து வச்சு நகரும். ஆத்தா அங்க பாரு பூனை கத்துது. டேய்… சும்மா கிடக்கமாண்ட. அது கத்துனா கத்துது உனக்கென்ன? எ