தூயனின்
சிறுகதைகளை ஜெயமோகனின் இணையதளத்திலிருந்த கட்டுரை மூலமாக சென்றடைந்தேன்.
http://thuyan.in/category/thuyans-short-stories/
கதைகளுக்கான
என்னுடைய விமர்சன அளவுகோல் என்ன என்பதை சொல்லிவிட்டு அதைப் பற்றி விமர்சிப்பது நன்றாக
இருக்குமென நினைக்கிறேன்.
- கதையை படிக்கும்போது அதனுள்ளே எளிதாக நுழைந்துவிட வேண்டும்.அதற்க்கு வடிவ ஒழுங்கு, கதையின் திருப்பம் என எத்தனையோ தொழில்நுட்பம் இருந்தாலும் அது எழுத்தாளரைப் பொறுத்தது. படிக்கும்போது அது வாசகனுள் நிகழ வேண்டும். தொழில் நுட்பங்களை வரையறுத்துக்கொண்டு சிறுகதை எழுதப்படவில்லை. அதே நேரம் அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. அதனால் படித்து முடித்தபிறகு அதைப் பற்றி கணக்கு போடாலாம் என்பது என் எண்ணம். நன்றாக இருந்தால், புதிதாக எதுவும் இருக்கிறதா என பார்க்கலாம். இல்லை என்றால், பழைய தொழில்நுட்ப்பத்தில் என்ன குறைகிறது என மதிப்பிடலாம்.
- கதை முடிந்த பிறகு அது தொடர்ந்து மனதுக்குள் குடைச்சலை உண்டு பண்ணுகிறதா என பார்க்க வேண்டும். கதையில் சொல்லாத ஒன்றை விரித்தேடுக்க ஒவ்வொரு வாசகனுக்கும் இடமளிக்க வேண்டும் (ஜெ சொன்னது போல வாசக இடைவெளி). இன்னும் சொல்லப்போனால் முடிவே இல்லாத விரித்தேடுத்தலுக்கு சாத்தியப்படும் போது, அது உச்சகட்ட கலை ஆகிறது. கலை சொல்வதில் இல்லை.
தூயனின் இன்னொருவன்
கதையை முடித்தவுடன் வரும் கேள்வி, கதை எதைப் பற்றியது
என்பதே. சிறுகதை வடிவம் என்பது ஒற்றை மையத்தைப் பற்றி சொல்லவே
உருவான கலை வடிவம் என ஜெ சொல்லுவார். கதையின் பெரும்பாலுமான இடத்தில்
வட இந்திய கூலித் தொழிலாலிகளின் பொதுவானபார்வையை உடைத்து, உள்ளே
பார்ப்பதற்க்கான வாய்ப்பை அளிக்கிறது. இடையிடையே காணாமல் போவதைப்
பற்றின மையம் வருகிறது. கடைசியில் ஓர்பாலின
உறவு குறித்து முடிகிறது. வாசகனான எனக்கு இது சற்று குழப்பத்தை
தருவதாக இருக்கிறது. இது கதையின் ஓட்டத்தை பெரிதும் பாதிக்கிறது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவி
செல்வதாய் தோன்றுகிறது.
தூயனின் சித்தரிப்புக்கள் அவருக்கு நிச்சயம் பலமாய் இருக்கிறது. அதுதான் கதையை தாங்கிப்
பிடித்து மேற்ச்சொன்ன காரணியை மறைத்துவிட செய்வதாய் இருக்கிறது.
“அவரின் இயக்கம் ஒரு கொலையை மென்மையாகச் செய்ய ஆயத்தப்படுவது போன்றிருந்து”
என இருதயசாமி உறவு கொள்வதை சொல்லியிருப்பார்.
“திரைகிழிந்தததுபோல வெளிப்பட்ட காட்சியால் அதிர்ந்துபோயிருந்தேன்” என இரவில் உறவு கொள்ளுவதை தீடிர் வெளிச்சத்தில் பார்த்தவனின் வார்த்தைகளில்
விவரிப்பாவது ஆகட்டும், தன் தனிப்பட்ட முத்திரையை பதித்திருப்பார்.
இந்த சித்தரிப்புக்களில் மூன்று முக்கிய அம்சம் இருப்பதாய்
தோன்றுகிறது. ஒன்று சுருங்க சொல்வது. இரண்டு காட்சியை விரித்தேடுக்க
நிறைய வாய்ப்பு தருகிறது. உடலுறவையும், கொலையையும் இணைத்தது அந்த காட்சியை விரித்தேடுக்க ஏதுவானதாக இருக்கிறது.
மூன்று காட்சியை நேரில் காண்பது போன்ற உணர்ச்சியை தருகிறது.
“திரைகிழிந்தததுபோல வெளிப்பட்ட காட்சி”.
மலையிலிருந்து குதிக்க முடிவு பண்ணிய பிறகு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு
பக்கத்தில் பள்ளத்தாக்கின் முனைக்கு நகரவேண்டும். சிறுகதையையும்
அப்படியே ஆரம்பிப்பது கதையின் வடிவ ஒருமைக்கு துணை நிற்க்கும். கதை ஓர்பாலின உறவை பற்றியது என்றால்
அதனைச் சுற்றி அமையாத இடங்களேல்லாம், கதையினுள் செல்ல தடையாக
இருக்கிறது. அமிர்தி ராஷன் அப்பா, கதை சொல்லியின்
அப்பா வந்தததிற்க்கான காரணம் கதையில் இல்லை.
வீட்டிலிருந்து ஓடி வந்த ஒருவன் வேலை தேடும் பொருட்டு மேன்சனில்
தங்க நேரிடுகிறது. அங்கு வட இந்திய கூலி தொழிலாலியை சந்திக்கிறன், நட்புகொள்கிறான்.
சுற்றத்தார் அவர்கள் ஓர் பாலினத்தவர் என நினைத்து திட்டுகிறார்கள்.
அந்த நிலையில் நண்பன் திரும்ப சொந்த ஊருக்கு போக நேருகிறது. தன்னுடைய ஈர்ப்பை அப்போதுதான் கதை சொல்லி உணர்ந்துகொள்கிறான். கதையை விரித்துக்கொள்ள கதையின் ஒருமை
வழிதரவில்லை. கதையின் மையம் சிறப்பாக இருக்க வேண்டுமால்,
கதையில் ஓர்பாலின உறவை நோக்கி நகரும் அவனது அக மனதைப் பற்றிய சித்திரம்
நன்றாக இருக்கவேண்டும். (சுற்றத்தாரின் பார்வைக்கு, அவனது உள்மனம் எந்த எதிர்வினையையும் ஆற்றவில்லை, வருத்தப்படுவதை
தவிர). வாசகன் அடைவது மிக முக்கியமானது. அந்த வகையில் இந்த கதை பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தாது என்பதே என் கருத்து.
பிரக்ஞைக்கு அப்பால்….
கலைஞனின்
மனதை உளப்பகுப்பாய்வு செய்யும் சிறுகதையிது. ஒவ்வொரு கதையும் வெவ்வெறு கதைகளத்தை கொண்டிருக்கிறது.
கீழை கலைஞர்கள் யாரும் தற்க்கொலை செய்துகொள்வதில்லை, மேற்க்கு இதற்க்கு மாறுபட்டது.
இதே கேள்வியை ஓஸோ தன் உரையில் எழுப்பியிருப்பார். அவனது மனம் எப்படி ஒரு கலையை உருவாக்குகிறது?
அக உலகமும், புற உலகமும் சந்திக்கிற முரண்பாட்டில் நிகழ்கிறது. நாம் அனைவருமே தன்னுள்ளே
அகஉலகை கட்டிவைத்திருக்கிறோம், அதைக் கொண்டுதான் புற உலகை காண்கிறோம். கலைஞர்கள் தங்களுக்கென்று
ஒரு ஆயுதத்தை (எழுத்து, ஒவியம்)பயன்படுத்தி அதனை வெளியே அழைத்துவருபவர்கள். ரசிகர்கள்
அதனை உணரும்போது அவர்களும் அதே விதமாக அக உலகத்தை காண வழி ஏற்ப்படுகிறது. அதனால் அவர்கள்
தீண்டப்படலாம். சிலர் அதனால் மிரளலாம், பிரமிக்கலாம் அல்லது விலகிச்செல்லலாம். அப்படி
விலகிச்சென்றவர்தான் ஹரிதாஸ் என்ற ஓவியர். அவரின் குறிப்புகளிலிருந்து ஆத்மநாமை பற்றிய
கதை நீளுகிறது.
ஆத்மநாம்
வரைகிற கிழவன் ஓவியம் கிட்டத்தட்ட தூயனின் எல்லா கதைகளிலும் வரும் அப்பா போன்றவர்.
ஏதோ ஒன்றை தேடித்தான் அவனது மனம் பித்து பிடித்து அலைகிறது. கனவுகளில் கண்ட காட்சிகளை
ஓவியமாக வரைகிறார். முதல் சில நாட்களில் ஹரிதாசுக்கே அவர் பிரக்ஞை இருக்கிறதா
என சந்தேகம் வருகிறது? பிறகு ஆமாம் என கண்டுகொண்டு அவரது அக உலகை காண ஆசை கொள்கிறார்.
கனவுகள்தான் அவருக்கான கலைகளின் ஆதாரமென ஒருநாள் கண்டுகொள்கிறார்.
ஆத்மநாமின்
பாட்டனார் ஒருகாலத்தில் பெரும் பணம்படைத்த ஜமின்தாராக இருந்திருக்கிறார். அவரது குடும்பம்
நிறைய நிலத்தை வைத்திருந்தது. கல்விக்காகவும், ஏழைக்காகவும் தன் சொத்தை செலவழிக்கிறார்
பாட்டனார். கடைசியில் ஏதுவும் இல்லாத இல்லார்காளாக மாறுகிறது அந்த குடும்பம். “வறண்ட நதிப்படுகையை நோக்கி கிழவர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். கருத்தத்
மென்தோலைப் போர்த்திய காய்ந்தவுடம்பு. பெரிய அட்டையொன்று ஊர்வது போன்று
முதுகுத்தண்டின் முடிச்சுகள். கைத்தடியை கையில் சாய்த்தவாறு மேய்ச்சலுக்கு
விட்டிருக்கும் மாடுகளின் திசையை வெறித்துக்கொண்டிருக்கிறார். அவரருகே பூமிக்குள்
இறங்கிச்செல்லும் இருள் கவிந்த படிக்கட்டுகள் கொண்ட கல்லறைத் தோட்டம்
வரையப்பட்டுள்ளது. உள்ளே மனித முகங்கள் அண்ணாந்தவாறு இருக்கின்றன. அதே கேன்வாஸில்
மற்றுமொரு பக்கத்தில் கிழவர் போர்வையை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு ஓடுவது போன்ற
சித்திரமும். அதுவும் அக்கிழவர் தான்” இணைத்துப்பார்க்க முடிகிறது. ஏன் ஒரே
கிழவன் எல்லா ஓவியங்களிலும் வருகிறார்? ஆத்நாமின் ஓவியம் என்பது கனவுகளினால் முளைத்தேழுவது,
அப்படியிருக்க கிழவன் வருவதேப்படி என்ற கேள்விக்கு பதிலாய்.
அம்மா
சொல்ல கேட்ட பூர்வக்குடி கதையை அவரின் மனம் வேறுவிதமாக மாற்றி கலையாக்கியிருக்கிறது.
கொடுத்து கொடுத்து தேய்ந்துபோன அவரின் பொருளைத்தான், பச்சையாக மாற்றி புனைந்திருக்கிறார்
போலும். தேடலில் முடிவில்லாதது பொருள்முதவாதம். “ஏனெனில் பசியாறப் பசியாற அந்நோய்
தீர்ந்துபோகாமல் ஊதிப் பெருத்துக்கொண்டேதான் போகுமாம்”. “புத்துணர்வு, வாழ்வின் மீது கொள்ளும் பற்று, இருத்தலின் நம்பிக்கை,
ஆசை,மோகம் என பேருருவங்களை பச்சை தன்னுள்
பொதிந்து வைத்திருக்கிறது”. அவரின்
அகமும், புறமும் கண்ட முரண்பாடுகளினால் முளைத்தது.
தூயன்
நல்ல கதை சொல்லி என்பதை நிறுவும் கதை இது. மொழிநடை கைகூடியிருக்கிறது. முடிச்சுகளில்
இருந்து கதையை துவங்குவது இவருடைய கதை பாணிக்கு இன்னும் சற்று கதை ஒருமைதரும் என்பது
எனது எண்ணம்.
திரைப்படம்
பார்க்கும் போது கதையில் உள்ள பாத்திரமாக தன்னை கருதிக்கொண்டு, அதில் வரும் சூழ்நிலைக்கு
ஏற்ப்ப தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ரசிகனாக
படத்திற்க்கு வெளியே நின்று அதனை ரசித்து விரிக்கின்ற வாய்ப்பும் அமைய வேண்டும். அது
இந்த கதையில் அமைந்திருப்பதாக நினைக்கிறேன்.
தூயனின்
கதை சொல்லும் பாணி, மொழி நடை அவரது பலமென நினைக்கிறேன். அதே நேரத்தில் கதையின் ஒருமை
மற்றும் விரிக்க விரிக்க தீர்ந்து போகாத பூடமான ஒன்று கதையில் இருக்கும் போது அவர்
நிச்சயம் இன்னும் பெரிய எழுத்தாளராக வருவார்.
வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment